Category: இலங்கை

  • ஜனாதிபதி, அமைச்சர்களை குறிவைத்து அவதூறான பிரசாரம்

    ஜனாதிபதி மற்றும் பல அரசாங்க அமைச்சர்களை குறிவைத்து சமூக ஊடகங்களில் அவதூறான பிரசாரங்களை மேற்கொள்ளும் நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க துணை அமைச்சர் சுனில் வட்டகல காவல்துறைக்கு உத்தரவிட்டுள்ளார்.

     ஜனாதிபதி மற்றும் தேர்ந்தெடுக்கப்பட்ட சில அரசாங்க பிரமுகர்களுக்கு எதிராக “மிகவும் தீங்கிழைக்கும் தாக்குதல்கள்” இணையவழியில் பரப்பப்படுவதாக தெரிவித்து, காவல்துறை அதிகாரிகளுடனான சந்திப்பின் போது அவர் இந்த அறிவுறுத்தல்களை வெளியிட்டார்.

    வெளிநாடுகளில் உள்ளவர்களால் அவதூறு பிரசாரம்

     இந்த பிரசாரங்களில் பல வெளிநாடுகளில் உள்ள நபர்களிடமிருந்து உருவாகின்றன என்றும், அத்தகைய உள்ளடக்கத்தை தொடர்ந்து பரப்புவது பொது பாதுகாப்புச் சட்டத்தின் பிரிவு 5 இன் கீழ் வரும் என்றும் துணை அமைச்சர் எச்சரித்தார்.

    “இது இன்னும் இரண்டு நாட்கள் தொடர்ந்தால், ஜனாதிபதி பிறப்பித்த உத்தரவுகளும் அவசரகால விதிமுறைகளும் இந்த சூழ்நிலைக்குள் தெளிவாக உள்ளடக்குகின்றன,” என்று அவர் கூறினார். “எந்தவொரு நபரும் தவறான தகவல்களைப் பரப்பவோ, உண்மைகளைத் திரிக்கவோ அல்லது இணையவழி தளங்கள் அல்லது AI தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி நிலைமையைக் குறைமதிப்பிற்கு உட்படுத்தும் பிரசாரத்தில் ஈடுபடவோ அனுமதிக்கப்படவில்லை.”

    ஐந்து தொடக்கம் பத்து ஆண்டுகள் வரை சிறை

     இவ்வாறான மீறல்களுக்கு ஐந்து ஆண்டுகளுக்கு மேல் சிறைத்தண்டனை விதிக்கப்படலாம் என்றும், சில குற்றங்களுக்கு பத்து ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை விதிக்கப்படலாம் என்றும் அவர் மேலும் குறிப்பிட்டார்.

  • வழிபாட்டுத் தலங்களை மீளமைக்க முன்னுரிமை தேவை – நாமல்

    சமீபத்திய அனர்த்தத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு அதிகபட்ச நிவாரணத்தை வழங்குமாறும், நாடு முழுவதும் சேதமடைந்த மத வழிபாட்டுத் தலங்களை மீளமைப்பதற்கு முன்னுரிமை அளிக்குமாறும் நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச அரசாங்கத்தை வலியுறுத்தியுள்ளார். 

    மத்திய, ஊவா, வடமேல், சபரகமுவ, மேல், தென், வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் உள்ள ஏராளமான பௌத்த விகாரைகள், கிறிஸ்தவ தேவாலயங்கள், இஸ்லாமிய பள்ளிவாசல்கள் மற்றும் இந்து ஆலயங்கள் குறிப்பிடத்தக்க சேதத்தை எதிர்கொண்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார். 

    பல மக்கள் அனர்த்தத்தின்போது இந்த மதஸ்தலங்களில் தஞ்சம் புகுந்ததைக் குறிப்பிட்டு, உடனடி அரசாங்க ஆய்வை மேற்கொண்டு, மீளமைக்கும் பணிகளை உடனடியாக ஆரம்பிக்க வேண்டும் என அவர் கூறியுள்ளார். 

    அனைத்து பாதிக்கப்பட்ட வழிபாட்டுத் தலங்களை சீரமைப்பதில் உள்ளூராட்சி அதிகாரிகளுக்கு உதவுமாறு ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் (SLPP) பிராந்திய அமைப்பாளர்களுக்கு அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார். 

  • மீண்டும் வீழ்ச்சியில் தங்க விலை

    நேற்று (02) 24 கரட் தங்கம் பவுண் ஒன்றுக்கு 340,000 ரூபாய்க்கு விற்பனையாகியிருந்த நிலையில், இன்று (03) 24 கரட் தங்கம் பவுண் ஒன்றுக்கு 2000 ரூபாயால் குறைவடைந்துள்ளதாக, இலங்கை நகைக்கடை உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. 

    அந்தவகையில், தற்போதைய தங்க விலை நிலவரப்படி, 

    24 கரட் தங்கம் பவுண் ஒன்று 338,000 ரூபாயாக விற்பனை செய்யப்படுகிறது. 

    22 கரட் தங்கம் பவுண் ஒன்று 311,000 ரூபாயாகவும், விற்பனை செய்யப்படுகிறது. 

    இதன்படி, 24 கரட் தங்கத்தின் ஒரு கிராமின் விலை 42,250 ரூபாயாகவும், 

    22 கரட் தங்கத்தின் ஒரு கிராமின் விலை 38,875 ரூபாயாகவும், விற்பனை செய்யப்படுகிறது.

  • 22 மாவட்டங்கள் ‘தேசிய அனர்த்தத்தால் பாதிக்கப்பட்ட பிரதேசங்களாக’ பிரகடனம்

    டிட்வா’ சூறாவளியின் தாக்கத்தினால் ஏற்பட்ட வெள்ளம் மற்றும் மண்சரிவுகளால் பாதிக்கப்பட்ட நாட்டின் 22 நிர்வாக மாவட்டங்கள் ‘தேசிய அனர்த்தத்தால் பாதிக்கப்பட்ட பிரதேசங்களாக’ அதிவிசேட வர்த்தமானி மூலம் அறிவிக்கப்பட்டுள்ளன.

    2010 ஆம் ஆண்டின் 19 ஆம் இலக்க மரணங்களைப் பதிவு செய்தல் (தற்காலிக ஏற்பாடுகள்) சட்டத்தின் 2 ஆம் பிரிவின் 9 ஆம் உப பிரிவின் ஏற்பாடுகளுக்கு அமைய இந்த வர்த்தமானி அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

    பதிவாளர் நாயகம் சசிதேவி ஜலதீபனினால் இந்த அதிவிசேட வர்த்தமானி அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

    No description available.

    No description available.
  • அனர்த்த காலங்களில் அரசியல் வேறுபாடுகளை தாண்டி மக்கள் பாதுகாப்புக்காக ஒன்றிணைந்து செயல்பட வேண்டியது அவசியம் – ஸ்ரீலங்கா ஜனநாயக கட்சி

    நாட்டின் பல்வேறு பிரதேசங்களில் தொடர்ச்சியாக உருவாகிக் கொண்டிருக்கும் வெள்ளம், நிலச்சரிவு, பல்வேறு காலநிலைச் சீற்றங்கள் போன்ற அனர்த்தங்கள் மக்கள் வாழ்க்கையை தீவிரமாக பாதித்து வரும் இந்த முக்கிய தருணத்தில், மனித உயிர்களை பாதுகாப்பதும், பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்குத் துரித நிவாரணம் வழங்குவதும் அரசியல் வட்டாரங்களின் முதன்மைக் கடமையாக ஸ்ரீலங்கா ஜனநாயக கட்சி வலியுறுத்துகிறது.

    அரசியல் கருத்து வேறுபாடுகள் இருக்கலாம். கொள்கை முரண்பாடுகளும் இயல்பானவையே. ஆனால், மக்களின் உயிர் மற்றும் வாழ்வு ஆபத்தில் உள்ள இந்த வேளையில் எந்த அரசியல் சிந்தனையும் முதன்மை அல்ல; மனிதநேயம் மட்டுமே முதன்மை. எனவே, தற்போதைய அவசர சூழலில் அரசாங்கத்துடன் எதிர்க்கட்சிகளும் ஒன்றிணைந்து செயல்பட வேண்டியது தேசியப் பொறுப்பாகும்.

    பாதிக்கப்பட்ட பகுதிகளில் மீட்பு பணிகள் வேகமடைய, அவசர நிவாரணம் முறையாகப் பகிர்ந்தளிக்க, சுகாதாரம், குடிநீர், தங்குமிடம், கல்வி, போக்குவரத்து போன்ற துறைகளில் உடனடி தீர்வுகள் காண, அனைத்து அரசியல் கட்சிகளின் ஒற்றுமையான பங்களிப்பு நாட்டுக்கு மிக அவசியமாக உள்ளது. மக்கள் தேவைகளை முன்னிறுத்தி, புறக்கணிப்போ, விமர்சன அரசியல் போக்கோ இல்லாமல் ஒருங்கிணைந்த செயற்பாடு மட்டுமே நாட்டை இந்த நெருக்கடியிலிருந்து மீட்கக் கூடிய வழி.

    எதிர்க்கட்ச்சிகள் முன்வைக்கும் குற்றச்சாட்டான நவம்பர் 12ம் திகதிய வானிலை அவதான நிலைய அறிவுறுத்தலுக்கமைய அணைகள் மற்றும் குளக்கட்டுக்களை திறந்துவிட்டு அனர்த்த ஆபத்தை குறைத்திருக்கலாம் என்ற நியாயமான கருத்துக்கள் இருந்த போதிலும் நடந்தவற்றை பேசிக்கொண்டிராமல் முன்னோக்கி பயணிக்க நாம் முன்வர வேண்டும் என்று வலியுறுத்துகிறோம்

    ஸ்ரீலங்கா ஜனநாயக கட்சி அனைத்து எதிர்க்கட்சிகளையும், சமூக அமைப்புகளையும், தன்னார்வ இயக்கங்களையும், குடிமக்களையும் அரசாங்கத்துடன் இணைந்து செயல்படுமாறு வலியுறுத்துகிறது. நாம் ஒரே தேசத்தின் பிள்ளைகள்; அனர்த்தத்தை எதிர்கொள்ள நாம் அனைவரும் ஒன்றாக நிற்க வேண்டிய கட்டாயப் பொறுப்பு உள்ளது. மக்களின் பாதுகாப்பும் நலனும் அரசியலுக்கு மேல். நாடு சிக்கலில் இருக்கும் போது ஒற்றுமை மட்டுமே நம் பலம் என தனது ஊடக அறிக்கையில் ஸ்ரீலங்கா ஜனநாயக கட்சி வலியுறுத்தியுள்ளது.

  • அனர்த்தம் காரணமாக மூடப்பட்டிருந்த பிரதான வீதிகள் மீண்டும் திறப்பு!

    நாட்டில் நிலவிய சீரற்ற வானிலை மற்றும் அனர்த்த நிலைமை காரணமாகப் போக்குவரத்திற்குத் தடைப்பட்டிருந்த 159 பிரதான வீதிகள் மீண்டும் போக்குவரத்திற்காகத் திறக்கப்பட்டுள்ளதாக வீதி அபிவிருத்தி அதிகாரசபை அறிவித்துள்ளது.

    அதன்படி, A-004: கொழும்பு – இரத்தினபுரி – வெல்லவாய – மட்டக்களப்பு வீதி , A-026: கண்டி – மகியங்கனை – பதியதலாவ வீதி, AA 006: அம்பேபுஸ்ஸ – குருநாகல் – திருகோணமலை வீதி , AA 010: கட்டுகஸ்தோட்டை – குருநாகல் – புத்தளம் வீதி , AA 003: பேலியகொட – புத்தளம் வீதி உள்ளிட்ட பல பிரதான வீதிகள் இதில் அடங்குகின்றன, வீதிப் பாதுகாப்பு மற்றும் மக்களின் அன்றாட நடவடிக்கைகளை இலகுபடுத்துவதற்காக, பராமரிப்பு மற்றும் புனரமைப்புப் பணிகளைத் துரிதப்படுத்த வீதி அபிவிருத்தி அதிகாரசபையின் பொறியியலாளர் குழுக்களும் கள உத்தியோகத்தர்களும் இரவும் பகலும் தொடர்ந்து பணியாற்றி வருவதாக அவ்வதிகாரசபை குறிப்பிட்டுள்ளது.

    இதேவேளை, தற்போது மூடப்பட்டுள்ள ஏனைய வீதிகளையும் விரைவில் திறக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

  • பேரிடரால் பாதிக்கப்பட்ட இலங்கை உள்ளிட்ட நாடுகளுக்கு நன்கொடை அளிப்பதாக ஆப்பிள் நிறுவனம் உறுதி!

    இந்தோனேசியா, மலேசியா, தாய்லாந்து மற்றும் இலங்கை ஆகிய நாடுகளில் இயற்கை பேரழிவுகள் ஏற்பட்டதைத் தொடர்ந்து, ஆசியாவில் நிவாரணப் பணிகளுக்கு ஆப்பிள் நிறுவனம் நன்கொடை அளிப்பதாக அதன் தலைமை நிர்வாக அதிகாரி டிம் குக் உறுதியளித்துள்ளார்.

    ஹொங்கொங்கில் மனிதாபிமான முயற்சிகளுக்கு அதன் திட்டமிடப்பட்ட பங்களிப்புகளை அறிவித்த ஒரு வாரத்திற்குள், ஆப்பிள் இப்போது அண்மைய இயற்கை பேரழிவுகளால் பாதிக்கப்பட்ட ஆசிய நாடுகளுக்கு பேரிடர் நிவாரண முயற்சிகளுக்கு நன்கொடை அளிக்கும்.

    இந்தோனேசியா, மலேசியா, தாய்லாந்து மற்றும் இலங்கை ஆகியவை அண்மைய பேரிடரினால் பாதிக்கப்பட்ட நாடுகளில் அடங்கும். 

    இந்த நாடுகளில் வெள்ளம் மற்றும் மண்சரிவுகளால் மொத்தம் 1,300க்கும் மேற்பட்டோர் உயிரிழந்ததுடன், நூற்றுக் கணக்கானோர் காணாமல் போயுள்ளனர்.

    இந்த ஆப்பிள் நிறுவனத்தின் திட்டமிடப்பட்ட நன்கொடை குறித்து அந்நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி டிம் குக் செவ்வாய்க்கிழமை (02) ஒரு சமூக ஊடகப் பதிவில் அறிவித்தார். 

    அதில், பாதிக்கப்பட்ட பகுதிகளில் நிவாரணம் மற்றும் நிர்மாண முயற்சிகளுக்கு நிதி உதவியை வழங்கவுள்ளதாக ஐபோன் தயாரிப்பாளர் கூறினார்.

    பாதிக்கப்பட்ட நாடுகளில் கன மழையால் பெரும் சேதம் ஏற்பட்டுள்ளது. 

    மண்சரிவுகள் மற்றும் அதிக வெள்ளப்பெருக்கு காரணமாக பலர் உணவு அல்லது தங்குமிடம் இல்லாமல் தவிக்கின்றனர்.

    எண்ணற்ற வீதிகளும், பாலங்களும் சேதடைந்தும்ள்ளன.

    ஆப்பிள் நிறுவனம் பெரும்பாலும் பேரிடர் நிவாரணப் பணிகளுக்கு நிதியுதவி செயது வருகிறது.

    2025 ஒக்டோபரில், மெலிசா சூறாவளிக்குப் பின்னர் நிவாரணப் பணிகளுக்கு நன்கொடை அளிப்பதாக நிறுவனம் அறிவித்தது. 

    2025 மார்ச் மாதம் ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கத்தைத் தொடர்ந்து மியான்மர் மற்றும் தாய்லாந்திற்கும் ஆப்பிள் இதேபோல் நன்கொடை அளித்தது.

    2024 ஆம் ஆண்டில் இயற்கை பேரழிவுகளால் பாதிக்கப்பட்ட பாகிஸ்தான், பிரேசில் உள்ளிட்ட பல்வேறு நாடுகளுக்கும் இந்த நிறுவனம் பணம் மற்றும் வளங்களை அனுப்பியது.

    2022 மார்ச் மாதம் உக்ரேனில் நடந்து வரும் நெருக்கடியால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு நிவாரணம் வழங்க ஆப்பிள் நிறுவனம் யுனிசெஃப் உடன் இணைந்து பணியாற்றியது.